Thursday, 17 Jul 2008
22ஆம் தேதி வரை நான்தான் சபாநாயகர்!: சோம்நாத் சட்டர்ஜி திட்டவட்டம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் தினமான வரும் 22ஆம் தேதி வரை சபாநாயகர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று சோம்நாத் சட்டர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுநாள்வரை யூகமாகவே இருந்து வந்த அவருடைய பதவி விலகல் விவகாரம் குறித்த செய்தி நேற்று அவராலேயே உறுதி செய்யப்பட்டது.
சோம்நாத் சட்டர்ஜி சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் சபாநாயகர் பதவியை விட்டுவிலகச் சொல்லி வற்புறுத்தி வந்தது.
இதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி.
நேற்று அவர் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
”சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, என்னுடைய பழைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. என்னைப் பற்றி பல தேவையற்ற யூகச் செய்திகள் வெளிவருகின்றன. நாடாளுமன்றத்தில் வரும் 22ஆம் தேதி நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சபாநாயகர் நான்தான்” என்றார்.
































