Wednesday, 9 Jul 2008
மத்தியில் சுமூக நிலை ஏற்படும்!: முதல்வர் கருணாநிதி நம்பிக்கை
சென்னை: டெல்லி அரசியலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இனி ஏற்படும் நிலை சாதகமாக அமையலாம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி எழுதிய கதையின் அடிப்படையில் வெளியாகி உள்ள ‘உளியின் ஓசை’ திரைப்பட பணிக்காக முதல்வர் கருணாநிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை நலிந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் ‘உளியின் ஓசை’ க்காக அந்தத் திரைப்ப்படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு ரூ.25 லட்சம் அளித்தனர்.
அந்தத் தொகைக்கு நான் கட்ட வேண்டிய வருமான வரி போக எஞ்சிய தொகையை- தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர், இயக்குநர் ராமநாராயணன் மூலமாக திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் வழங்குவதற்காக இன்றைய தினம் அளிக்கின்றேன்.
2004-2005ஆம் ஆண்டுகளில் இதுபோலவே நான் எழுதிய ‘கண்ணம்மா’ திரைப்படத்திற்கான 10 லட்சம் ரூபாயையும், ‘மண்ணின் மைந்தன்’ திரைப்படத்திற்கான 11 லட்சம் ரூபாயையும் ஆக மொத்தம் 21 லட்சம் ரூபாயை “சுனாமி” நிவாரண நிதிக்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் என் மகன் மு.க.ஸ்டாலின் மூலமாக வழங்கினேன்.
அதேபோலவே இப்போது இந்த ‘உளியின் ஓசை’ திரைப்படத்திற்கு கிடைத்த தொகையையும், திரைப்படத்துறையைச் சேர்ந்த நலிந்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்காவே அளித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டப் பின்னர் அவர் அளித்த பேட்டி விவரம்:
டெல்லியில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து உங்கள் கருத்து என்ன?
இதுபற்றி ஏற்கனவே கருத்து கூறிவிட்டேன்.
நேற்று இருந்த நிலையில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
எந்த முன்னேற்றமும் இல்லை. அதே நிலை தொடர்கிறது.
மத்தியில் உள்ள கூட்டணியை உருவாக்கியதில் உங்களுக்கும், சுர்ஜித்துக்கும் பெரும்பங்கு உண்டு. இப்போது சுர்ஜித் கட்சி விலகிவிட்டதால் கூட்டணியின் வேகம் குறையுமா?
ஏற்கனவே உள்ள காரணம்தான். புதிதாக காரணம் கூறி குழப்ப வேண்டாம்!
மதவாத சக்திகளை எதிர்க்கும் நிலையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதா?
இப்போது உள்ள நிலைமை இது. இனி ஏற்படும் நிலை சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கலாம்.
































