Saturday, 5 Jul 2008
மதுரைக்குள் நுழைய அரசு கேபிள் டிவிக்கு தடை: ஜெயலலிதா குற்றச்சாட்டு
சென்னை: மதுரை நகரில் மு.க. அழகிரியின் கேபிள் சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் தமிழக அரசு கேபிள் டிவி கழகம் தடுக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பணிகள் தஞ்சாவூர், கோவை, வேலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு செயல்படும் முறை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பதற்கு இந்த ஒரு செய்தியே ஆயிரம் விளக்கங்களை சொல்லும்.
தென் தமிழகத்தின் மிகப்பெரிய நகரம், தமிழ்நாட்டில் எல்லா வகையிலும் இரண்டாவது பெரிய மாநகரமான மதுரை இந்தப் பட்டியலில் இல்லை. அங்கே கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கும், பேரன்கள் கலாநிதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கும் இடையே கேபிள் விவகாரத்தில் பெரும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவேதான் மதுரை மாநகரம் அந்தப் பட்டியலில் இல்லை.
திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம் மதுரை மண்டலப் பகுதி கேபிள் நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும் என்று கருணாநிதி விளக்கம் சொல்கிறார். மதுரை நகரில் மு.க.அழகிரியின் கேபிள் சாம்ராஜ்யத்திற்குள் அடியெடுத்து வைக்காமல் தமிழக அரசு கேபிள் டிவி கழகம் தடுக்கப்படுகிறது என்பதுதான் இதன் பின்னணி.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்கள் அரசை ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சுழல்விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்களில் மதுரை மாநகரில் அழகிரி உற்சவமூர்த்தியாக உலா வருவதை எண்ணற்ற ஊடகங்கள் படம்பிடித்து காட்டி விட்டன..
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனை வெட்டிக்கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள், தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கிய அதே நபர்கள், மதுரை நகர தெருக்களில் பயங்கரமாக உலா வருகின்றனர். அங்கே ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. செய்வது அறியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வு, பணவீக்கம், பற்றாக்குறை, விவசாயம் முடக்கம், பசி, பஞ்சம் என்று கோடானுகோடி மக்கள் கண்ணீர் வடிப்பது ஒரு பக்கம். எதைச் செய்தாலும் பணமே பிரதானம் என்று வாரிச்சுருட்டும் கருணாநிதி குடும்பம் ஒரு பக்கம். அன்றாட வாழ்க்கைக்கு வழி இன்றி நிற்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம்.
இவர்களின் நடவடிக்கைகளை தேர்தல் நேரத்தில் இந்திய வாக்காளர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல தகவல்களைத் திரட்ட அ.தி.மு.க முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.









































