Posted on Thursday 31 July 2008
சீனம் சென்று வந்தேன்!
கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
சீன மருந்துத் தயாரிப்பாளர் மையூன் சொன்ன அதிர்ச்சிச் செய்திகள் உண்மையா? என்று சென்னையின் பிரபல மருந்து விற்பனையாளர், வி.மீனாட்சி சுந்தரத்தைக் கேட்டேன்.
”அப்படியே உண்மை” என்றார்.
எனவே பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் விரைவில் இந்திய மருந்து உலகில் பெரிய விலையேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிற உண்மையை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
”மிஸ்டர் மை யூன் கேட்கிறேனே என்று தவறாக எண்ணாதீர்கள். இந்தியாவுக்கு என்றால் சற்று சுமாரான தரம்தான் அனுப்புவார்களாமே சீனாவில், உங்கள் விஷயத்தில் அப்படி இல்லையே?”
உடனே கால் மீது கனமான ஒரு பொருள் விழுந்தால் ஒரு குதிகுதிப்பார்களே அப்படி ஒரு குதி குதித்தார் மை யூன்.
”ஐயையோ! என்ன மிஸ்டர் லீனா! (யோவ்! லீனாங்குறவங்க ஒரு பொம்பளைய்யா!) இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இந்தியர்கள் காஸ்ட் கான்ஷியஸ் உள்ளவர்கள் என்பது தெரியும். அதற்காக மருந்து விஷயத்தில் விளையாடுவோமா? மருந்து விஷயத்தில் பல தரங்கள் கிடையாது. ஒரே தரம் மட்டும்தான். அதுவும் சிறந்த தரம்” என்று கண்கள் பனிக்கப் பேசினார். இன்னும் சற்று விட்டால் அழுதே விடுவார் போல் இருந்தது. எனவே, விஷயத்தைச் சற்று மாற்றிப் பேச வேண்டியிருந்தது.
”ஷாங்காயில் பார்க்க வேண்டியவை என்று நீங்கள் எதைச் சொல்வீர்கள்?”
”யுவான் தோட்டம் பாருங்கள் மிக அழகானது. கோயில் விஷயத்தில் ஆர்வம் இருந்தால் கன்பூஷியஸ் கோயிலுக்குப் போங்கள்.”
”கன்பூஷியஸா?” இந்தச் சொல்லைக் கேட்டதும் இருக்கையை விட்டு எழுந்திருக்காத குறைதான் நான்.
”தத்துவமேதை கன்பூஷியஸையா சொல்கிறீர்கள்?”
”அவரேதான்.”
”அவருக்குக் கோயிலா? அவர் என்ன கடவுளா?”
”கடவுளுக்குத்தான் கோயில் அமைக்க வேண்டுமா என்ன? சீனாவில் தோன்றிய இணையற்ற வாழ்வு நெறிகளை வகுத்த மேதை கன்பூஷியஸ்.”
”தெரியும். அவரது தத்துவங்களை எங்கள் கல்கண்டு இதழில் பலமுறை பிரசுரிக்கிறோம். அவரை மேடையில் குறிப்பிடாத எங்கள் தமிழகப் பேச்சாளர்களே மிகக் குறைவு.”
”அப்படியா? எங்கள் கன்பூஷியஸை உங்களவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே! பலே! இந்தியர்களைப் போல் சீனர்களும் கூட்டுக்குடித்தனத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். ஆசியாவில் சீனர்களும் இந்தியர்களும்தான் இன்னமும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். சீனாவில் கூட்டுக் குடித்தனத்திற்கு அடித்தளம் அமைத்தவரே கன்பூஷியஸ்தான். எனவே, இந்த ஆலயம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.”
அவசியம் பார்க்க வேண்டும் என அடையாளம் கேட்டுக் கொண்டேன். மை யூன் சொன்ன பெயர்களெல்லாம் எனக்கு வாயில் நுழைய மறுத்தன என்பதோடு, நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. எனவே ஒவ்வோர் எழுத்தாக ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.
பிறகு நானும் செந்தில் குமாருமாகப் போனோம். சாலையோரம் இருந்த எளிய கோயில் அது. பிரமாண்டம் என்பதே இல்லை. ஓரளவு கூட்டம் இருந்தது. பலர் அமைதியாக செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு ஊதுபத்திகளை வாங்கிக் கொண்டு பற்ற வைத்துச் சொருகிவிட்டு வந்தனர். அமைதியும் கட்டுப்பாடும் அங்கே இலக்கணங்களாக இருந்தன. நிறையக் கேள்விப்பட்ட கன்பூஷியஸை நேரில் பார்த்தபோது, மனிதர் பல கதைகளையும் தத்துவங்களையும் சொல்லிச் சொல்லி பூகோள எல்லைகளைக் கூடத் தம் அறிவாற்றலால் கடந்திருக்கிறாரே என வியக்கத் தோன்றியது.
சிற்றுருவாய் இருந்தார் கன்பூஷியஸ். சில சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சீனக் கோயில்களுக்கும், இந்துக் கோயில்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. பூக்கள், ஊதுபத்திகள், அமைதி, இரு கைகூப்பிய வணக்கம், பூசாரி போன்ற ஒருவர் ஆகியவற்றையெல்லாம் இந்துக் கோயில்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
வாழும் வழிமுறைகளை நமக்கு நிறையச் சொல்லிக் கொடுத்த வள்ளுவருக்கு நாம் ஏன் இன்னும் முக்கியத்துவம் கொடுத்து வணங்கக் கூடாது என்கிற ஏக்கமே கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது.
உள்ளே நுழையும்போது பூக்களை விற்கிற கடையில் உள்ளவர்கள் வேணுமா என்பதுபோல் கண்களால் கேட்கிறார்களே தவிர, ”வாங்கம்மா! பூம்மா!” என்கிற குரல்களெல்லாம் இல்லவே இல்லை!
பெரிய பெரிய கடைகள் முதல், பூக்காரக் கடைகள் வரைக்கும் வாடிக்கையாளரை வற்புறுத்தாத இந்தக் கலாசாரம் எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று என்பேன்.
காலணிகளைப் பார்த்துக் கொள்ள எவரும் இல்லை. டோக்கன் இல்லை. ”அதெல்லாம் இங்கே யாரும் தொடமாட்டாங்க. சும்மா வாங்க” என்று நம்பிக்கையூட்டினார் செந்தில்.
”செருப்புகள், ஷூக்கள் மட்டுமல்லை, நம் பைகளை, நம் உடமைகளை விட்டுவிட்டுச் சென்றால்கூட எவரும் தொடமாட்டார்கள்” என்றார்.
பிச்சைக்காரர்களைத் தேடினேன். கோயிலில் இல்லாமல் வேறு எங்கே இவர்களைக் காண முடியும் என்கிற எண்ணம் எனக்கு. ஒருவரையும் காணவில்லை.
தன்மானத்துடன் பிழைக்க எண்ணுகிறார்களா? அல்லது சீன அரசு இவர்களை அப்படிப் பார்த்துக் கொள்கிறதா? அல்லது பிச்சையெடுத்தால் அடி, உதைதானா? தெரியவில்லை. செந்தில்குமாரிடம் கேட்க எண்ணினேன். விடுபட்டுப் போய்விட்டது.
ஷாங்காயில் யுவான் தோட்டம் மிக அழகானது. அவசியம் பாருங்கள் என்று சொன்னது நினைவுக்கு வரவே, அங்கேயும் சென்றோம்.
”மிங் மற்றும் குவிங் காலத்து முறையில் இத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றாள் ஒரு வழிகாட்டிப் பெண். ”யாருங்க மிங் குவிங்கெல்லாம்? எனக்குத் தெரியாதுங்க” என்றேன்.
“வாட்? வாட்?’ என்றவள் பிறகு சிரித்துக்கொண்டு அமைதியாக விட்டுவிட்டாள்.
யுவான் தோட்டம் மகாப் பெரிசு. நடந்து நடந்து கால்கள் வலிக்க, ஆனால் தோட்டத்தின் அழகும், நேர்த்தியும், பசுமைகளும் வண்ணங்களும் அந்த வலியை மறக்கடிக்க வைத்தன. கி.பி.1559இல் உருவாக்கப்பட்டதாம் இந்தத் தோட்டம். அப்பாடா? எப்போதோ தமிழில் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் வந்துவிட்டது.
எப்படி இப்படி நானூற்று ஐம்பது ஆண்டுகளையும் கடந்து இதைப் பாழடிக்காமல் பாதுகாக்கிறார்கள் என்று வியக்கத் தோன்றியது.
அதைவிட வியப்பு, எப்படி பதினாறாம் நூற்றாண்டுக்காரர்களுக்குப் பூங்காக்களின் அருமை தெரிந்தது? என்று எண்ணத் தோன்றியது.
”30 விதமான சீனிக் (scenic) ஸ்பாட்டுகள் இங்கே உள்ளன. நாம் நான்கைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை” என்று சீன வழிகாட்டி சொல்ல,
”என்னது இன்னும் இது போல் 26 இடங்களா? என்னால் முடியாது. இங்கே பாட்டரி கார் சைக்கிளெல்லாம் கிடையாதா? நான் வரலை இந்த விளையாட்டுக்கு” என்றேன் வழிகாட்டியிடம்.
”என்ன இப்படி இளைஞராக (!?) இருந்து கொண்டு கிழவன் மாதிரி பேசுகிறீர்கள்? வாருங்கள் என் பின்னால்! நான் இந்தப் பூங்காவைத் தினமும் எத்தனை முறை வலம் வருகிறேன் தெரியுமா?”
‘நடப்பதே உங்கள் தொழிலம்மா. நாள் முழுக்க உட்கார்ந்த இடத்திலிருந்தே எழுதுவது எங்கள் தொழிலம்மா’ என்று சொல்ல நினைத்தவன் கப்சிப் ஆனேன். என்னைக் கப்சிப் ஆக்கியது என்னை அந்தம்மா ‘இளைஞன்’ என்று கருதிக் கொண்டது என நினைக்கிறேன்.
உணவுத் துகள் போன்ற ஒரு பொருளை வாங்கக் சொல்லி, ”அந்தக் குளத்தில் வீசுங்கள்” என்றாள் வழிகாட்டிப் பெண்.
”ஏன் ஏதும் நம்பிக்கையா? ஏதும் நல்லது நடக்குமா?” என்றேன்.
”அதெல்லாம் இல்லை. மீன்கள் வரும் தின்ன” என்றாள். போட்டதும் வந்தன பாருங்களேன் கூட்டங்கள், அசந்து போனேன். போடப் போட, கொசக்கொசவென ஒன்றின்மேல் ஒன்று தாவி நொடியில் வீசிய அனைத்தையும் காணாமலடித்தன.
”இன்னும் வாங்கிப் போடுங்கள்.” ‘உனக்கென்னம்மா! நீ பாட்டு சொல்லிடுவே! நாங்கள் வந்த இடத்து ஏழைகள். நோட்டைத் தேய்த்துத் தேய்த்துதான் எங்களால் விட முடியும்’ என்று சொல்ல நினைத்து இதையும் அடக்கிக் காத்தேன்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

































வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
காங்கிரசின் புதுக் கணக்கு
கத்தரிக்காய் காரக்கறி - அலமேலு ரங்கநாதன்
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி
அழகுக் குறிப்புகள் - புவனா

